Tuesday, 27 July 2021

Asaivaadum Aaviyae அசைவாடும் ஆவியே


 

அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப
இறங்கி வாருமே

1. பெலனடைய நிரப்பிடுமே
பெலத்தின் ஆவியே
கனமடைய ஊற்றிடுமே
ஞானத்தின் ஆவியே

2. தேற்றிடுமே உள்ளங்களை
இயேசுவின் நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை
அபிஷேக தைலத்தினால்

3. துடைத்திடுமே கண்ணீரெல்லாம்
கிருபையின் பொற்கரத்தால்
நிறைத்திடுமே ஆனந்தத்தால்
மகிழ்வுடன் துதித்திடவே

4. அலங்கரியும் வரங்களினால்
எழும்பி ஜொலித்திடவே
தந்திடுமே கனிகளையும்
நிறைவாக இப்பொழுதே

Monday, 26 July 2021

Arul Eralamai Peiyum அருள் ஏராளமாய் பெய்யும்


 

1. அருள் ஏராளமாய்ப் பெய்யும்

உறுதி வாக்கிதுவே

ஆறுதல் தேறுதல் செய்யும்

சபையை உயிர்ப்பிக்குமே

 

அருள் ஏராளம்

அருள் அவசியமே

அற்பமாய் சொற்பமாயல்ல

திரளாய்ப் பெய்யட்டுமே

 

2. அருள் ஏராளமாய்ப் பெய்யும்

மேகமந்தார முண்டாம்

காடான நிலத்திலேயும்

செழிப்பும் பூரிப்புமாம்அருள்

 

3. அருள் ஏராளமாய்ப் பெய்யும்

இயேசு  வந்தருளுமேன்

இங்குள்ள கூட்டத்திலேயும்

கிரியை செய்தருளுமேன்அருள்

 

4. அருள் ஏராளமாய்ப் பெய்யும்

பொழியும் இஷணமே

அருளின் மாரியைத் தாரும்

ஜீவ தயாபரரேஅருள்

Sunday, 25 July 2021

Ennuyire Ennuyire என்னுயிரே என்னுயிரே


 

என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே

காலமெல்லாம் காக்கும் தேவன் உன்னோடுதான்

 

கண் காணும் செல்வங்கள் கரைந்தோடிப் போனாலும்

கரையாத அவரன்பு குறையாது

கண்ணாக எந்நாளும் காத்திடுவார்

 

துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்

துணையாளன் இருக்கின்றார் திகையாதே

தோள் மீது உனைத் தாங்கி நடத்திடுவார்

 

உலகெல்லாம் வெறுத்தாலும் உறவெல்லாம் மறந்தாலும்

உலகாளும் மன்னவன் உனக்குண்டு

என்றென்றும் தன் அன்பில் தேற்றிடுவார்

Saturday, 24 July 2021

Karththaraiye Nambidum Devajaname கர்த்தரையே நம்பிடும் தேவ ஜனமே


 

கர்த்தரையே நம்பிடும் தேவ ஜனமே

கலங்காதே ஒரு போதும் வெட்கமடைவதில்லை

 

1. செங்கடல் கோரமாய் முன்னே நிற்கும்

சேனைகள் பின்னால் தொடர்ந்து வரும்

ஆனாலும் முன்னேறிப் போ என்கிறாரே

அவரே ஓர் வழி திறந்திடுவாரே   - கர்த்தரையே

 

2. கானானின் குடிகள் கொடியவரே

கானகபாதை கடினமாமே

கடந்து போய் நாம் அதை சுதந்தரிப்போமே

கர்த்தரே நமக்காய் யுத்தம் செய்வாரே  - கர்த்தரையே

 

3. பாகாலின் சீடர்கள் சவால் விட்டு

பதிலளியா தேவனை வேண்டுகிறார்

எலியாவின் தேவன் இறங்கி வந்தாரே

எரி நெருப்பால் இன்று பதிலளிப்பாரே  - கர்த்தரையே

 

4. உனக்கெதிராக ஆக்கிடுமாயுதம்

ஒருக்காலும் வாய்க்காமல் மறைந்திடுமே

உன் மேல் ஓர் யுத்தம் எழும்பினாலும்

உன்னை இரட்சிக்கும் தேவன் உண்டு   - கர்த்தரையே

 

5. யாக்கோபின் கூட்டமே பயப்படாதே

ஈசாக்கின் தேவன் உன் துணையே

அன்னை தன் சேயை மறந்தாலுமே

ஆண்டவர் இயேசு அரவணைப்பாரே    - கர்த்தரையே

 

6. சீயோனே உந்தன்  பாடுகளெல்லாம்

சில காலம் என்று நினைத்தே பாடு

சீக்கிரம் வருவார் சேர்த்திட உன்னை

பாக்கிய மடைவாய் பரலோக வாழ்வில்   - கர்த்தரையே

Vilaintha Palanai Arupparillai விளைந்த பலனை அறுப்பாரில்லை


 Vilaintha Palanai Arupparillai

விளைந்த பலனை அறுப்பாரில்லை

விளைவின் நற்பலன் வாடிடுதே

அறுவடை மிகுதி ஆளோ இல்லை

அந்தோ மனிதர் அழிகின்றாரே


1.அவர் போல் பேசிட நாவு இல்லை

அவர் போல் அலைந்திட கால்கள் இல்லை

எண்ணிலடங்கா மாந்தர் சத்தம்

உந்தன் செவியினில் தொனிக்கலையோ – விளைந்த


2. ஆத்தும இரட்சண்யம் அடையாதவர்

ஆயிரம் ஆயிரம் அழிகின்றாரே

திறப்பின் வாசலில் நிற்பவர் யார்

தினமும் அவர் குரல் கேட்கலையோ – விளைந்த


3.ஆத்தும தரிசனம் கண்டிடுவாய்

ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய்

விரைந்து சென்று சேவை செய்வாய்

விளைவின் பலனை அறுத்திடுவாய் – விளைந்த


4.ஒரு மனம் ஒற்றுமை ஏக சிந்தை

சபைதனில் விளங்கிட செயல்படுவாய்

நிமிர்ந்து நிற்கும் தூண்களைப் போல்

நிலைவரமாய் என்றும் தாங்கி நிற்பாய் – விளைந்த


5.ஆவியின் வரங்கள் ஒன்பதனை

ஆவலுடன் நீயும் பெற்றிடுவாய்

சபையின் நன்மைக்காய் உபயோகிப்பாய்

சந்ததம் சபையினில் நிலைத்திருப்பாய் – விளைந்த


6.தேவனின் சேவையில் பொறுப்பெடுப்பாய்

உந்தனின் பங்கினை ஏற்றிடுவாய்

கர்த்தர் நாட்டின தோட்டத்திலே

கடைசிவரை நீயும் கனி கொடுப்பாய் – விளைந்த

Thursday, 22 July 2021

Inba Yesu Rajavai Naan இன்ப இயேசு ராஜாவை நான்


 

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் (2)
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் (2)

1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு
கறைதிரை அற்ற பரிசுத்தரோடு (2)
ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2)

2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது
அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு (2)
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2)

3. முட் கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன்
வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து (2)
ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன் (2)

4. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (2)
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா (2)

5. ஆஹா எக்காளம் என்று முழங்கிடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ
அப்பா என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ (2)
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும் (2)

Wednesday, 21 July 2021

Aruvadai Miguthi அறுவடை மிகுதி


 

அறுவடை மிகுதி ஆளோ இல்லை
அன்பரின் கதறல் கேட்டிடுதே

1. நானிலம் முழுவதும் நானூறு கோடி
நாசத்தின்  வழியை நாடிடுதே
இயேசுவின் அன்பு நம்மையும் நெருக்க
எழும்பிடுவோம் நாம் வாலிபரே

2. அமைதி இல்லை நம்பிக்கை இல்லை
அழுகையும் கண்ணீர் வாழ்க்கையிலே
உறக்கமும் இல்லை முழு உணவில்லை
உணர்ந்திடுவீர் இதை வாலிபரே

3. மிருகம் போல் உழைத்தும் வறுமையின் தொல்லை
வாதையில் வாடிடும் கூட்டத்தைப் பார்
ஆற்றுவாரில்லை தேற்றுவாரில்லை
அன்பினைக் காட்டவும் யாருமில்லை

4. நம்பிக்கையற்ற கல்லறை நாடி
நாளினில் லட்சங்கள் செல்கிறதே
திறப்பினில் நிற்க ஆளில்லை என்று
திகைத்துக் கதறிடும் இயேசுவைப் பார்

5. அலறிடும் பிள்ளைகள் குரலினைக் கேட்டு
அழுவதன்றி வேறென்ன செய்வார்
யாரை அனுப்புவேன் யார் போவார் என்றார்
கதறலை என் உள்ளம் கேட்டிடாதோ

6. அன்பரே வந்தேன் அழுகையைக் கண்டேன்
அர்ப்பணித்தேன் எந்தன் வாழ்க்கையினை
பாரினில் கழுதையாய் சுமந்தும்மை சென்று
பாதத்தில் விடுவேன் என் ஜீவனையே